திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.110 திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) - திருநேரிசை
கன்றினார் புரங்கள் மூன்றுங்
    கனலெரி யாகச் சீறி
நின்றதோ ருரவந் தன்னால்
    நீர்மையும் நிறையுங் கொண்டு
ஒன்றியாங் குமையுந் தாமும்
    ஊர்பலி தேர்ந்து பின்னும்
பன்றிப்பின் வேட ராகிப்
    பருப்பத நோக்கி னாரே.
1
கற்றமா மறைகள் பாடிக்
    கடைதொறும் பலியுந் தேர்வார்
வற்றலோர் தலைகை யேந்தி
    வானவர் வணங்கி வாழ்த்த
முற்றவோர் சடையில் நீரை
    ஏற்றமுக் கண்ணர் தம்மைப்
பற்றினார்க் கருள்கள் செய்து
    பருப்பத நோக்கி னாரே.
2
கரவிலா மனத்த ராகிக்
    கைதொழு வார்கட் கென்றும்
இரவினின் றெரிய தாடி
    இன்னருள் செய்யும் எந்தை
மருவலார் புரங்கள் மூன்று
    மாட்டிய நகைய ராகிப்
பரவுவார்க் கருள்கள் செய்து
    பருப்பத நோக்கி னாரே.
3
கட்டிட்ட தலைகை யேந்திக்
    கனலெரி யாடிச் சீறிக்
சுட்டிட்ட நீறு பூசிச்
    சுடுபிணக் காட ராகி
விட்டிட்ட வேட்கை யார்க்கு
    வேறிருந் தருள்கள் செய்து
பட்டிட்ட வுடைய ராகிப்
    பருப்பத நோக்கி னாரே.
4
கையராய்க் கபால மேந்திக்
    காமனைக் கண்ணாற் காய்ந்து
மெய்யராய் மேனி தன்மேல்
    விளங்குவெண் ணீறு பூசி
உய்யரா யுள்கு வார்கட்
    குவகைகள் பலவுஞ் செய்து
பையரா அரையி லார்த்துப்
    பருப்பத நோக்கி னாரே.
5
வேடராய் வெய்ய ராகி
    வேழத்தி னுரிவை போர்த்து
ஓடரா யுலக மெல்லா
    முழிதர்வர் உமையுந் தாமுங்
காடராய்க் கனல்கை யேந்திக்
    கடியதோர் விடைமேற் கொண்டு
பாடராய்ப் பூதஞ் சூழப்
    பருப்பத நோக்கி னாரே.
6
மேகம்போல் மிடற்ற ராகி
    வேழத்தி னுரிவை போர்த்து
ஏகம்பம் மேவி னார்தாம்
    இமையவர் பரவி யேத்தக்
காகம்பர் கழற ராகிக்
    கடியதோர் விடையொன் றேறிப்
பாகம்பெண் ணுருவ மானார்
    பருப்பத நோக்கி னாரே.
7
பேரிடர்ப் பிணிகள் தீர்க்கும்
    பிஞ்ஞகன் எந்தை பெம்மான்
காருடைக் கண்ட ராகிக்
    கபாலமோர் கையி லேந்திச்
சீருடைச் செங்கண் வெள்ளே
    றேறிய செல்வர் நல்ல
பாரிடம் பாணி செய்யப்
    பருப்பத நோக்கி னாரே.
8
அங்கண்மா லுடைய ராய
    ஐவரா லாட்டு ணாதே
உங்கள்மால் தீர வேண்டில்
    உள்ளத்தா லுள்கி யேத்துஞ்
செங்கண்மால் பரவி யேத்திச்
    சிவனென நின்ற செல்வர்
பைங்கண்வெள் ளேற தேறிப்
    பருப்பத நோக்கி னாரே.
9
அடல்விடை யூர்தி யாகி
    அரக்கன்றோள் அடர வூன்றிக்
கடலிடை நஞ்ச முண்ட
    கறையணி கண்ட னார்தாஞ்
சுடர்விடு மேனி தன்மேற்
    சுண்ணவெண் ணீறு பூசிப்
படர்சடை மதியஞ் சேர்த்திப்
    பருப்பத நோக்கி னாரே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com